Saturday, March 7, 2009

நான் சாட்சி

“நான்” இவ்வுலகிலோர் சாட்சி.
யொகோவாவின் சாட்சியாகவோ
அன்றி
”ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்”
என்பதுபோன்றொரு பக்கச் சார்பான
சாட்சியமாகவோ இல்லாமல்
நிதர்சனங்களின் தரிசனங்களின்
நித்திய சத்தியமாய்
“நான்”-இன் சாட்சியம்.

எந்தவொரு சட்டத்தையும்
சட்டை செய்யும் அவசியமோ,
கட்டுப்படும் நிர்ப்பந்தமோ,
அன்றி நெறிப்படுத்தலுக்கு
உட்படுத்தப்பட வேண்டிய
தேவையினையோ தாண்டியது
“நான்”-இன் சாட்சியம்.

என் தாய்தந்தையின்
உறவிற்கான சாட்சியுடன்
“நான்”-இற்கான முதலாவது
சாட்சியம் ஆரம்பமாயிற்று.

முதற் “போணி”
நன்றாய்ப் போனதாலதன்
வியாபாரப் பேரேடும்
விரிந்துகொண்டே வளர்ந்தது.

பெற்றதுக்கு சாட்சியாய்
கற்றதுக்கு சாட்சியாய்
கற்பிற்கு சாட்சியாய்
காதலிற்கு சாட்சியாய்
நட்பிற்கு சாட்சியாய்
நாடலிற்கு சாட்சியாய்
குடலிற்கு சாட்சியாய்
கூடலிற்கு சாட்சியாய்
உடலிற்கு சாட்சியாய்
ஊடலிற்கும் சாட்சியாய்
சாட்சியம் சாட்சியம்
சாட்சியத்திற்கும் சாட்சியாய்...

ஏன்,
ஒரு பூவின் புன்னகைக்கு கூட
”நான்” சாட்சியமாய் இருக்கின்றேன்
தர்க்கங்கள் வர்க்கங்கள்
தாண்டிய சாத்திரஙகட்கபபால்....
நிர்வாணம் பூணவிரும்பி
அணிவிக்கப்பட்ட ஆடைகள் சில
அகற்றிவிட்டவொரு
நள்ளிரவு தாண்டிய
நடைப்பயணத்தில்,
ஒன்றல்ல இரண்டல்ல
ஒருநூறு மலர்கள்,
கொத்துக் கொத்தாக...
நாள்தோறும் நடந்து கடக்கின்ற
நந்தவனத்தின் சொந்த மலர்கள் தான்,
ஆனாலும் அன்றைக்கு மட்டுமே
அவை எனக்காய் முறுவலித்தன.
பின் என்னுடன் பேசவும் செய்தன.
கண்ணும் கண்ணும் கலந்தபின்
வாய்ச்சொல்லில என்ன பயனென்ற
வள்ளுவமொழி காதலர்க்கு மட்டுமல்ல.
என்பதற்குகூட அன்றைக்கு “நான்” சாட்சி

இன்றைக்குக் கூட முதன் முதலாய்
“நான்”-ஏ “நான்”-ஐ விட்டுப் பிரிந்து
பின் சிலவொரு கணப்பொழுதுகளில்
மீண்டு வந்ததற்கும் “நான்”-ஏ சாட்சி.

எந்தவொரு தருணத்திலும்
“நான்” ஒரு வாதியாகவோ
இல்லை பிரதிவாதியாகவோ
கூண்டில் நிறுத்தப்பட்டதில்லை.

ஆயினும் பல்வேறு சந்தர்ப்பங்களிலும்
அவ்வாறே “இந்த நான்” நினைத்ததுணடு.
அப்போதெல்லாம் “அந்த நான்” -இற்கு
செயலிற் செயலின்மையையும்
செயலின்மையிற் செயலையும்
காணும் பக்குவம் கனிந்திருக்கவில்லை.

இப்போதும்கூட இடையிடையே
காரிய மயக்கத்தில் அது தன்னையொரு
வாதியாகவோ அன்றி நீதித்தலைமையாகவோ
கற்பனையில் களிக்கிறது
காலத்தை வீணே கழிக்கிறது.
அதற்கும் கூட “நான்” தான் சாட்சி

2 comments:

Anonymous said...

அக்னி சாட்சியாக,சபையோர் சாட்சியாக......, என்று அந்த வாழ்க்கையின் முக்கிய தருணத்தை இதுவரை சந்திக்காத எனது நண்பர், தானே பலவற்றுக்கு சாட்சியாகவும்,தனக்குள்ளும் பல சாட்சிகள் இருப்பதாகவும், தனக்கு உள்ள புலமையை மறைமுக வெளிப்படுத்த இத்தளத்தில் உள்ள அத்தனை ஆக்கங்களையும் தனக்கு சாட்சியாக பயன்படுத்துவதை எந்த மனசாட்சி உள்ள மனிதராலும் ஏற்று கொள்ள முடியாது ("நான் சாட்சி" உட்பட) நன்றி:- க.ஆரூரன்

Anonymous said...

அக்னி சாட்சியாக,சபையோர்கள் சாட்சியாக,என்று அந்த வாழ்கையின் முக்கிய தருணத்தை இன்னமும் சந்திக்காத என் நண்பர், சாட்சிக்கான அர்த்தம் இழந்து,தானே பலவற்றுக்கு சாட்சியாகவும்,தனக்குள்ளே பல சாட்சிகள் இருப்பதாகவும், தனது புலமையை மறைமுகமாக வெளிப்படுத்த தனது ஆக்கங்களை இத்தளத்தில் சாட்சியாக வைத்து("நான் சாட்சி" உட்பட) தனது இனவிருத்திக்கான உச்சகட்ட தேடலை புதிய பாணியில் தொடங்கியிருக்கும் நண்பனை பாரட்டாமல் இருந்தால் எனக்கு மன சாட்சி இல்லை என்றாகிவிடும்,
நன்றி:-க.ஆரூரன்