Sunday, February 15, 2009

நான் - ஆயுள் கைதி

ஆயுள் தண்டனை
விதிக்கப்பட்டவொரு
சிறைக்கைதி “நான்”.

“நான்” இற்கான சிறைகள்
அடிக்கடி இடம்மாறினாலும்,
மாற்றம் ஒன்றே மாறாதது போல்
சிறைவாழ்வு மட்டும் மாறாமல்.

இது,
“நான்” வரும்போதே வாங்கி
வந்த வரமா?
இல்லை சபிக்கப்பட்டதால்
இந்த வரவா?
என்பதில் இந்த
“நான்”-இற்குள்ளே
அடிக்கடி கைகலப்பு.

தண்டனைக் கைதியாயல்லாமலொரு
விசாரணைக் கைதியாய்தான்
கருவறையெனுமொரு
தனியான சிறையறையில்
“நான்” இற்கான சிறைவாசம்
ஆரம்பமாயிற்று.

எந்த நீதிமன்றில்
“நான்” இற்கான குற்றப்பத்திரிகை
தாக்கல் செய்யப்பட்டதோ
சத்தியமாய் நானறியேன்.

இல்லை,
காலி, களுத்தறை
வெலிக்கடை, பிந்தனுவெவ
கைதிகள் போலவேயென்
சிறைவாழ்வும் ஆயிற்றோ
யாரொடு நோவேன்?

எது எப்படியோ
குற்றம் கூறப்படாமலேயே
“நான்” இற்கான தண்டனை
வழங்கப் பட்டாயிற்று.

ஆரம்பத்திலிதை
ஏற்றுக் கொள்ளாமல்
எதிர்த்தழுது ஆர்ப்பாட்டம்
செய்தபோதே
அன்னையெனும் வடிவிலாரம்பித்து
அன்புச்சங்கிலி கொண்டந்த “நான்” ஐப்
பிணைக்கத் தொடங்கினார்கள்.
தாங்களேயொரு சிறைக்கைதிகள்
என்றறியாதவர்களெல்லாம்.

நாளாக நாளாக
சொந்தமென பந்தமென
நட்பென நாடலென
காதலென கஷ்டமென
“நான்” இற்கான கட்டுகள்
அதிகமாயாயிற்று,
அது மேலும்
இறுக்கமாயுமாயிற்று

சுமைகளும் தளைகளும்
சுகமெனவே பட
சிறகுகள் வெட்டப்பட்ட
கூண்டுக் கிளியாகி
சிறைவாழ்வே சுவர்க்கமென்ற
சிந்தனையுமாயிற்று.

சிந்தனை கலைந்தவொரு
நித்திரைப் பொழுதின் கனவினிலே
விட்டு விடுதலையாகி எனக்கானவொரு
சுதந்திர உலகினைக் கண்டேன்.

உண்மைகள் உறைக்கவே
“நான்” உணரத் தொடங்கினேன்
உலகினை உய்த்தறிந்து
உய்யத் துடித்ததில் தெரிந்தது,

”நான்”-இற்கான உடைகளும்
உணவுகளும், ஏன்
உணர்வுகளும் கூடவிங்கே
திணிக்கப்பட்டதாயேயிருக்கிறது.

”நான்” ஆசைப்பட்ட
ஆடைகளை அணியவோ
அன்றி விரும்பிய வர்ணத்திலான
உடைகளை உடுத்தவோ
”நான்” இற்கான அனுமதி
மறுக்கப்பட்டதாயேயிருக்கிறது.

உள்ளப் புழுக்கம்
உண்டான போதெல்லாம்
நிர்வாணமாகவோ, இல்லை
ஆடைகள் குறைத்தோ
உலாவரவே “நான்”
ஆசைப்படுகிறேன்.

ஒப்பீடுகளும்
ஒத்துப்போதல்களுமின்றி
யாரால் முடியும்
”நான்” ஐ அவ்வாறே ஏற்க?

விதிகளை மீறுகின்றேனென்ற
குற்றச்சாட்டுக்ள் வேறு.
கலகக்காரன் “நான்” என
ஒதுக்கல்கள் வேறு.

எப்படியோ எனக்கு
விதிக்கப்பட்ட சிறைச்சாலை
இதுவேயென்ற ஈற்றுணர்வின்
ஒத்துப்போதலில்,

அணியத் தொடங்கினேன் ஆடைகளை
எனக்கெனத் தரப்பட்ட
வர்ணங்களில், வடிவங்களில்
“நான்” ஒருஆயுட்கைதியாய்.

Wednesday, February 11, 2009

நான் - நடிகன்

“நான்” ஒரு நடிகன்
நாளொரு நாடகமும்
பொழுதொரு வேடமுமாய்
அரிதாரம் தாங்குதலே
அவதார நோக்கமாய்...

எம்.ஜி.ஆர், சிவாஜி,
ரஜனி, கமல்,
விஜய், அஜித்,
சிம்பு, தனுஷ்
இவர்களா நடிகர்கள்?
இல்லை
சாருக்கான், ஜக்கிசான்
கிருத்திக்ரோஷன்,
சில்வஸ்ரர்ஸ்ரோலன்
இவர்களையா நடிகர் என்பாய்?

யாருக்கோவெல்லாம்
விசிறிகள் கூட்டம்
facebook-இல் கூட
அவர்களின் ஆட்டம்.

அடித்தது அதிர்ஷ்டம்
“கெசன்யா சுகினோவா” விற்கு,
நீயில்லாத உலகஅழகிப்போட்டி!

என்றொரு காதலன்
எழுதும் ஹைக்கூ-வாய்
இங்கே,

யாரையோவெல்லாம் சிபாரிசுசெய்கிறார்கள்
ஆஸ்கார் விருதுக்கு.
அமைதியாய் “நான்”!

இப்போது கூட,
ரோம் பற்றியெரிகையில்,
பிடில் வாசித்த நீரோ-வாய்
முல்லையில் மூங்கில்குருத்துகள்
மூசியெரிகையில்,
கொல்லையில் புல்லாங்குழல் கொண்டு
அடுப்பூதிப் பார்க்கும்
அரிதார புருஷன் “நான்”.

அழுகையொலியுடன் தான்
இத்திரையுலகிலென்
அறிமுகம் ஆரம்பமாயிற்று.

பெற்றவர் உற்றவர்
மற்றவர் எல்லாம்
கைதட்டி கைதூக்க
நடிப்புக் கலையெனக்கு
நன்றாகப் பட்டிற்று. அதுவெனக்கு
நன்றாகவும் பற்றிற்று.

நாளாக நாளாக
“நான்” கொண்ட கோலங்கள்
“நான்” ஆகி “நான்” ஆகி
எந்த “நான்”, “நான்”-இன் ”நான்”
என்றவொரு குழப்பத்தில்,
குழப்பத்தின் மயக்கத்தில்
“நான்”-களே “நான்”-ஆனேன்
நயம்பட்ட நடிகனானேன்.

மைந்தனாய், மருகனாய்,
மாமனாய், மச்சானாய்,
அண்ணனாய், தம்பியாய்
நண்பனாய், பகைவனாய்,
நல்லவொரு தலைவனாய்,
நனிசிறந்த தொண்டனாய்,
நயம் கெட்ட வஞ்சனாய்,
அன்பனாய், அரக்கனாய்,
அறிவுகெட்ட மூடனாய்,
கள்ளனாய், கயவனாய்,
கைவிட்ட காதலனாய்,
கரம்பிடித்த கணவனாய்,
தந்தையாய்ப் பாட்டனாய்...

எல்லாப் பிறப்பும்
பிறந்திளைத்த வாதவூரனாய்
எல்லா வேடமும்
தரித்திளைத்த வேடதாரி “நான்”.

காலகாலமாய்
நடித்துவரும் என்நடிப்பை
நடிப்பாய்ப் பார்க்காமல்
பார்வையாளர் எல்லாமேயென்
பாத்திரத்துடன் ஒன்றிவிட்டதால்,
ஊரறியாமல் உலகறியாமலொரு
அரிதார புருஷன்
அவதார புருஷனாய்...