Friday, November 21, 2008

நான் - சாத்தான்

ஹாய்!
என்ன?
பொழுது போகலையா?
சோம்பல் வருகிறதா?

வா!
உன்னைத் தான்
தேடிக் கொண்டிருக்கும்
உன் உயிர்த்தோழன்
சாத்தான் “நான்”.

எப்படி
நேரேற்றத்திற்கு எதிரேற்றமுண்டோ,
வடமுனைவுக்கு தென்முனைவுண்டோ,
அப்படியே இறைவனுக்கு எதிர்மறையாய்
அவன் பிடியிலிருந்து
மீட்டு உனை இரட்சிப்பதற்காயான,
இயற்கையின் மறுபுள்ளி “நான்”.

நீ தேடியலையாமலே
உனைத்தேடி
“பல வடிவங்களில்”
வருபவன்
“நான்” மட்டுமே.

ஏதேன் தோட்டத்தில்
ஏவாளுடனான “என்”
முதற் சந்திப்புடன்
உனக்கு “என்” அறிமுகம்
ஆரம்பித்திருக்கலாம்.

ஆதாம் ஆப்பிள்
கடித்திருக்காவிடின்
இப்போதுகூட நீ
ஆண்டவன் சொற்கேட்பதான
ஆணவத்துடன்
அம்மணமாய்....

பைபிளின்
பழைய ஏற்பாட்டுடன்
சூரியன் புவியைச்
சுற்றுவதான அறியாமையுடன்...

உனக்குள் இருந்த
ஊற்றுக் கண்ணை
திறந்து விட்டவன் “நான்”

இன்று சந்திரனுக்கு
சந்திராயன் அனுப்பிவிட்ட
ஆனந்தக் களிப்பையும்
தந்தவன் “நான்”

“நான் நிரந்தரமானவன்
எந்த நிலையிலும்
எனக்கு மரணமில்லை” - என்று
கண்ணதாசனை கவிசொல்ல
வைத்தவனும் “நான்” தான்.

சிலருக்கு “நான்”
முதலிலொரு
மதுவில் தரிசனம் தருவேன்
பின் கால்(ா) முளைக்கவொரு
காரிகையிலாவேன்.

பலருக்கு “நான்”
கோபத்தின் வெளிப்பாடாய்
Ego -வில் தெரிவேன்.
பின்னாளில் அவர்கள் “என்”
பக்தர்களாவார்கள்.

அட நீயும் “என்”
தொண்டனாகவா
ஆசைப்படுகிறாய்?

“நான்” என்ன “நீ” என்ன
எல்லாமே “நான்” தான்.

“வாடா என் வெட்டிப்பயலே”

*************************

சும்மா வெட்டியாயிருப்பது எனப்படுவது யாதெனில்
சாத்தானாகிய எனைநோக்கி கடுந்தவம் புரிவதாகும்.

Friday, November 14, 2008

நான் - கடவுளானவன்

கடவுள்!
இருக்கிறார்,
இல்லை,
இருந்தால் நல்லாயிருக்கும்,
என்கின்ற
வாதப் பிரதிவாதங்கட்கப்பால்
இதோ “நான்” கடவுள்
அவதரித்து விட்டேன்!

புத்தனைப் போல்
போதி மரத்தடியின்
பௌர்ணமி இரவிலல்லாமல்
அமவாசை கடந்த மூன்றாம்நாள்
விடிகாலைப் பொழுதில்
இடியுடன் கூடிய
அடைமழை பொழிகையில்
ஜன்னலால் தெரிந்த
வெட்டி இறங்கிய
மின்னல் கீற்றுடன்
எனக்குள் அந்த
உளவியல் மாற்றத்தை
உணர்ந்து கொண்டேன்.

பக்தனைப் போல்
வேடம்கொண்டு
பித்தனாய் அலைபவனே
இங்கே வா.
இதோ உன் முன்
கடவுளாய் “நான்”!

முந்து சிவன்,
அவன் மனைவி மாதேவி,
அவர்தம் பிள்ளைகாள்
கணேசன், கந்தன்.
பாற்கடலில் பள்ளி கொள்ளும்
பரந்தாமன், அவன்தன்
தொப்புட் கொடி மைந்தன்
பிரம்மன் இவர்களா
உன் கடவுள்?

இல்லை
அல்லா, யேசு போல்
அல்லாமல்,
இப்போதும்
மானிட உருக்கொண்டுலவும்
பாபா, பகவான் அம்மாவா?
அவர்களெல்லாம் சும்மா.
வெறும் பம்மாத்து.

புரிகிறது உன் குழப்பம்.
யாரடா “நான்” என்று.
நன்று.
குழம்பு,
சந்தேகப்படு,
தெளிவடை.

வேண்டுமானால்
வைதேகி தேகம்
தகிக்காத அக்கினியைக்கூட
சந்தேகப் படு.
பின்னொரு நாளில்
சலவைத் தொழிலாளியின் சொற்கேட்டு
சீதையைக் காட்டுக்கனுப்பிய
ராமனிலும் “நீ” மேலாவாய்.

ஆகா எப்படி நம்புவதா?
வாடா வா.
உன்னைத்தான்
தேடிக் கொண்டிருக்கிறேன்
மூடனைப் போல்
சொல்வதற்கெல்லாம்
தலையாட்டாமலொரு
சீடனைப் போல்
அந்த இராமகிருஷ்ணருக்கு
வாய்த்த விவேகானந்தனாய் வா.
உனக்குத்தான்
“நான்” காட்சியளிப்பேன்.

“நான்”
இது என்
பதினோராவது அவதாரம்
ஏன்?
இறுதியானதும் கூட.
ஆம்!
“நான்”-ஏ “நான்”-ஆய்
ஆனபின்
இனியெதற்கு
இன்னோரவதாரம்?

தந்தையின் விந்தாய்
தாயின் முட்டைநாடி
“நான்” நீந்திச் சென்றதுவென்
மச்ச அவதாரம்.

ஓவரி (ovary) யிலிருந்து
தாயின் முட்டையை
பலோப்பியன் குழாய் வழியே
“நான்” சுமந்து வந்ததுவென்
கூர்ம அவதாரம்.

முட்டை துளைத்து
விந்து நுழைகையில்
“நான்” கொண்டது
வராக அவதாரம்.

முதற்கலமிரண்டாய் பிரிந்ததை,
பின்,அதுவொரு பிண்டமாய் வளர்ந்ததை
பிரபஞ்சத்தின் பெருவெடிப்பு (Big bang)
என்கிறார்கள் பேதை விஞ்ஞானிகள்.
அவர்கள் அந்தப் பிரபஞ்சமே “நான்”
என்பதை அறியாத அஞ்ஞானிகள்.

ஒரு “தூண்”-இற்குளிருந்து
வெளிப்படுவதுவாய்
ஒரு தாயிற்குளிருந்து
“நான்” வெளிப்பட்டது
நரசிம்ம அவதாரம்.

மழலையாய் இருக்கையிலெனை
வாஞ்சையுடன் அணைப்போர்
நெஞ்சில் “கால்”-ஆல் உதைக்கையில்
“நான்” கொண்டது
வாமன அவதாரம்.

ஆறாம் வயதில் கவண் எடுத்து
“வில்”-லாய் விளையாடிப் பலருக்குத்
தொல்லை கொடுத்த
பாலகப்பருவமதில்
“நான்” எடுத்தது
பரசுராம அவதாரம்.

அதன்பின்
பதின்மப் பருவம் வரை
எந்தப் பெணணையும்
ஏறெடுத்தும் பாராததில்
“நான்” பூண்டது
ராம அவதாரம்.

கல்விச் சாலையில்
எழுதுகோல் “ஏர்” பிடித்து
ஏணிப்படிகளாய் வகுப்புகள்
ஏறுகையில்,
“நான” ஏற்றிருந்தது
பலராம அவதாரம்

என் வயதொத்த பெண்கள்
பாரதி சொன்ன பதினாறு வயதுப்
பருவமடைகையில்
கோபியர் சூழ்ந்த
கோபால கிருஷ்ணனாய்
எனக்குள் “நான்” மாறியது
கிருஷ்ண அவதாரம்.

கல்விக்காலம் முடிந்து
கதி கலங்கித் திரிந்ததும்
மாயைகளுக்குள்
மதி மயங்கி நின்றதும்
விதி வலிதென்று
விழி பிதுங்கி நின்றதும்
என்னைத் தேடித்தேடி
எங்கோவெல்லாம்
“நான்” அலைந்ததும்
கல்கி அவதாரம்

ஈற்றில் இதோ
பதினோராவதாய்
“நான்“ அடைந்தது
நான் அவதாரம்.
ஆம் “நான்” கடவுளானவன்

அடேய்!
எதற்காயென் பின்னால்
வருகிறாய்?
“நான்” ஐக் கடவுள்
என்று ஏற்றுக் கொண்டதாலா?

போடா வெண்ணெய்.....

************

கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைபவர்கட்கு:
வெண்ணெயை உருக்கினால் நெய்.
உன்னை ஒருக்கினால் “நீ” கடவுள்.

Friday, November 7, 2008

நான்

யார் நான்?
இப்படித்தான்
தனித்திருந்து இனித்திருந்த
பொழுதொன்றில்,

நான்-இற்குளிருந்தொரு
நான்-ஒன்று தன்
ஆத்ம விசாரணையை
ஆரம்பித்தது.
யார் நான்?

ரத்தமும் தசைப்பிண்டமும்
நித்தமும் நிழலாடும் - மன
சித்தமும் அதன் யுத்தமும்
பித்தமுமென்புமுள தோற்பையாம்.

நான்-இற்குளிருந்தின்னொரு
நான்-ஒன்று விடை பகர்ந்தது.
அதையேற்கமறுத்து
நான்-இற்குள்ளிருந்து
வெளியே குதித்தது
இன்னுமொரு நான்.

யுகந்தோறும் அவதரிப்பதாயில்லாமல்
தினந்தோறும், ஏன் கணந்தோறும்
கலங்கள் புதிதாய் ஜனிக்கையில்,
இன்றிருக்கும் நான் எப்படி
நேற்றிருந்த நான்-ஆகும்?

நான் எனப்படுவது யாதெனில்
எண்ணங்கள் கொண்ட பல
வண்ணக் கலவைகள் சேர்
கிண்ணமென்பதே திண்ணமாகும்.

கணக்குத் தெரிந்த அந்த முதல் நான்
பிணக்குப் பண்ணியது நிறுவிக்காட்டுமாறு.
சுணக்கமின்றிச் சொன்னதந்த நான்
இணங்கச் சொல் இந்த நான்-ஐ
நானதன் எண்ணவுடைகளைக் கலைத்துப்போட

எல்லா நான்-களுக்கும்
நான்-ஐ அறிவதில்
அலாதி ஆர்வமாதலால்
ஏகமனதுடன் ஏற்றுக்கொண்டன.

முதலிலொரு முதலிரவுப்பெண்ணின்
வெட்கமகற்றி ஆடையகற்றும்
நளினத்துடன், நகநுனி கூடத்
தீண்டாது நாகரிகமாய்த் தான்
எண்ணங்கள் சூழ்ந்திருந்த
நான்-ஐத் தீண்டவாரம்பித்ததந்த நான்.

நேரம் செல்லச் செல்ல
கோரப் பல் முளைத்து
விகாரப் பட்ட முகத்துடன்
நான்கங்குல நகமும் நீண்ட,
காடையன் ஒருவனின் காமவெறியுடன்
நகக்குறி, மற்றும் பற்குறி பதித்து
நான்-ஐச் சுற்றியிருந்த நினைவாடைகளை
கிழித்தெறியத் தொடங்கிப் பின்
களைத்து வீழ்ந்ததந்த நான்-ஐப் பார்த்து
கைகொட்டிச் சிரித்ததிந்த நான்-கள்.

நான்-ஆலா முடியாது?
அந்த நான்-இன் நான்;
அடங்க மறுத்தடம்பிடித்தது.
பெரியதாயொரு மண்வெட்டி
கொணர்ந்து பாளம்பாளமாய்
வெட்டியெறிந்ததந்த நான்
இந்த நான்-ஐ இவ்வளவு
நாட்களாய் சுற்றிவளைத்திருந்த
எண்ணத் திணிவுகளை.

ஈற்றில்,
இறுதிவெற்றியை அடையும்
உவகையுடன் மீந்திருந்த
ஒவ்வோரணுக்களையும் நோண்டி
அதன் இலத்திரன்களைப்
பிடித்திழுத்துவைத்து
சொறியத் தொடங்கியதந்த நான்.

துச்சாதனனுரித்துப் போட்ட
திரௌபதையின் துகிலாய்
திரண்டு கிடந்த,
அந்த நான் உரித்துப் போட்ட
நான்-களெல்லாம்,
கூக்குரலிட்டுக் கத்தின
“விடாதே, நான்-ஐக் கண்டுபிடி” என்று
அந்த நான்-இடம்.

புருவங்களுக்கு மத்தியில்
ஒளிந்திருக்கும் ஆத்மா(?)வாகிய
நான்-ஐக் கண்டறியப் போவதான
களிப்புடன் இறுதியணுவையும்
இலக்குவைத்து இயங்கத்
தொடங்கியதந்த நான்.

என்ன இருக்கிறது?
எப்படியிருக்கிறது?
ஆவலுடன் காத்திருந்த
உரித்துப் போடப்பட்ட
நான்-களிடம் அந்த நான்
சொல்லிற்று

“போடாங்... வெங்காயம்”