Friday, December 5, 2008

நான் - மாயை

வந்திட்டியா?
வாடா வா...
தெரியும் நீ வருவாயென
வரவழைத்தவனே “நான்” தானே

கடவுளை சாத்தானாகவும்
சாத்தானை கடவுளாகவும்
கடவுளை கடவுளாகவும்
சாத்தானை சாத்தானாகவும்
காட்டிச் சிரிப்பவன் “நான்”

மழலை மொழியினில்
குழந்தையின் புன்சிரிப்பில்
குறும்புக் குழப்படியில், அதன்
குறுக்குமறுக்கு ஓட்டத்தில்
குசும்பாய் உனைப்பார்த்து
குதூகலிக்கச் செய்பவன் “நான்”.

அழகிய ஆரணங்கின்
கன்னக் குழியழகில்
கருநாகக் குழலழகில்
சின்ன இடையழகில்
சிக்கென்ற பின்னழகில்
மதர்த்த மாரழகில்
மயக்கும் விழியழகில்
வாழைத்தண்டுக் காலழகில்
ஆழிப்பேரலையாய்
உனை மயக்கி பின்
உன் வாழ்பாவவன் “நான்”.

நகக்கணுக்கள் சீழ்ப்பிடித்து
அறுந்து தொங்கும்
தொழுநோயாளி விரலழகில்
நரைதிரைகூன் விழுந்து
இரைதேடி இரந்துவாழும்
இம்சைப்பட்ட ஜீவனில்
அருவருக்க வைப்பவன் “நான்”.

சிலரைப் பொன் காட்டி
சிலரைப் பொருள் காட்டி
சிலரைப் பெண் காட்டி
சிலரை மண் காட்டி
பலரைப் பணம் காட்டி
பயம் காட்டி பவ்லா காட்டி
பண்பு காட்டி பணத்தைக் காட்டி
அன்பு காட்டி அருளைக் காட்டி
கருணை காட்டி காதல் காட்டி
கடைசியில் பேய்க்காட்டி
பல காட்சிகள் தருபவன் “நான்”.

மயக்கித் தெளித்து,
தெளித்துக் குழப்பி,
குழப்பிக் கலக்கி,
கலக்கி மயக்கி.....

கலைத்துக் குலைத்து,
குலைத்துச் சீராக்கி,
சீராக்கி நேராக்கி
நேராக்கிக் கலைத்து....

களைத்து விழுந்து
விழுந்து எழுந்து
எழுந்து நிமிர்ந்து
நிமிர்ந்து களைத்து....

கலந்து சேர்த்து
சேர்த்துக் கலந்து
கலந்து கலந்து
சேர்த்து சேர்த்து....

“போடா சாம்பாறு”