Sunday, March 8, 2009

நான் சும்மா

அம்மாவும் அப்பாவும்
சும்மா இருக்கையில்
சும்மா இராததால்
சும்மா “நான்” ஜனித்தேன்

சும்மாவே பிறந்ததாலோ
சும்மா சும்மா அழுதேன்
சும்மா சும்மா அடம்பிடித்து
அம்மாவிற்குலை வைத்தேன்

சும்மா இருப்பது
“குவாகுவா” வென்றோ
“puppy shame” என்றோ
கேலிசெய்து,
சும்மாவிருந்தவென்னை
ஆடைகட்டி அழகுசெய்தர்
சும்மா படிக்க வைத்தர்
சும்மாவே வளர வைத்தர்

சும்மா சும்மாவென
எல்லாமே சும்மாவாய்...
அம்மாண “நான்“ -ஆல,
சும்மா இருக்கேலா.

சும்மா பொழுதுபோக
வலைப்பின்னல் நெய்தேன்
நண்பன் “call” எடுத்து
என்னப்பா செய்கிறாயாம்.
சும்மாவே சொன்னேன்
சும்மா தான் இருக்கிறேன்
சும்மா இருக்காதே
ஏதாவது செய்யென்றான்
என்னசெய்யவெனக் கேட்க
சும்மா ஏதாவது செய்யட்டாம்.

என்னைய்யா சும்மா?
எதுவையா சும்மா?
சும்மா உட்காந்து யோசிக்க
சும்மா சும்மா எண்ணங்கள்.

வாழ்க்கை சும்மா
வாலிபம் சும்மா
பிறப்பு சும்மா
இறப்பு சும்மா
சாமி சும்மா
சாத்தான் சும்மா
ஆண் சும்மா
பெண் சும்மா
அது சும்மா
இது சும்மா

எல்லாமே சும்மாவாய்
சும்மாவும் சும்மாவாய்
சும்மா சும்மா
சும்மா வளர்ந்தது.

காய்ந்த காட்டிடை
கக்கிய தீயதாய்
“நான்” இனை நோக்கியும்
சும்மா வந்தது.

சும்மா வந்தது
சுற்றி வளைத்தது.
சும்மாவிருந்த “நான““-ஐ
சூழ்ந்து நின்றெரித்தது.
எரிந்து முடிந்து
எஞ்சியதெதுவென
சும்மா பார்த்தேன்.
அட!
“சும்மா”.

நான் சும்மா
நீ சும்மா
போடா சும்மா.

Saturday, March 7, 2009

நான் சாட்சி

“நான்” இவ்வுலகிலோர் சாட்சி.
யொகோவாவின் சாட்சியாகவோ
அன்றி
”ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்”
என்பதுபோன்றொரு பக்கச் சார்பான
சாட்சியமாகவோ இல்லாமல்
நிதர்சனங்களின் தரிசனங்களின்
நித்திய சத்தியமாய்
“நான்”-இன் சாட்சியம்.

எந்தவொரு சட்டத்தையும்
சட்டை செய்யும் அவசியமோ,
கட்டுப்படும் நிர்ப்பந்தமோ,
அன்றி நெறிப்படுத்தலுக்கு
உட்படுத்தப்பட வேண்டிய
தேவையினையோ தாண்டியது
“நான்”-இன் சாட்சியம்.

என் தாய்தந்தையின்
உறவிற்கான சாட்சியுடன்
“நான்”-இற்கான முதலாவது
சாட்சியம் ஆரம்பமாயிற்று.

முதற் “போணி”
நன்றாய்ப் போனதாலதன்
வியாபாரப் பேரேடும்
விரிந்துகொண்டே வளர்ந்தது.

பெற்றதுக்கு சாட்சியாய்
கற்றதுக்கு சாட்சியாய்
கற்பிற்கு சாட்சியாய்
காதலிற்கு சாட்சியாய்
நட்பிற்கு சாட்சியாய்
நாடலிற்கு சாட்சியாய்
குடலிற்கு சாட்சியாய்
கூடலிற்கு சாட்சியாய்
உடலிற்கு சாட்சியாய்
ஊடலிற்கும் சாட்சியாய்
சாட்சியம் சாட்சியம்
சாட்சியத்திற்கும் சாட்சியாய்...

ஏன்,
ஒரு பூவின் புன்னகைக்கு கூட
”நான்” சாட்சியமாய் இருக்கின்றேன்
தர்க்கங்கள் வர்க்கங்கள்
தாண்டிய சாத்திரஙகட்கபபால்....
நிர்வாணம் பூணவிரும்பி
அணிவிக்கப்பட்ட ஆடைகள் சில
அகற்றிவிட்டவொரு
நள்ளிரவு தாண்டிய
நடைப்பயணத்தில்,
ஒன்றல்ல இரண்டல்ல
ஒருநூறு மலர்கள்,
கொத்துக் கொத்தாக...
நாள்தோறும் நடந்து கடக்கின்ற
நந்தவனத்தின் சொந்த மலர்கள் தான்,
ஆனாலும் அன்றைக்கு மட்டுமே
அவை எனக்காய் முறுவலித்தன.
பின் என்னுடன் பேசவும் செய்தன.
கண்ணும் கண்ணும் கலந்தபின்
வாய்ச்சொல்லில என்ன பயனென்ற
வள்ளுவமொழி காதலர்க்கு மட்டுமல்ல.
என்பதற்குகூட அன்றைக்கு “நான்” சாட்சி

இன்றைக்குக் கூட முதன் முதலாய்
“நான்”-ஏ “நான்”-ஐ விட்டுப் பிரிந்து
பின் சிலவொரு கணப்பொழுதுகளில்
மீண்டு வந்ததற்கும் “நான்”-ஏ சாட்சி.

எந்தவொரு தருணத்திலும்
“நான்” ஒரு வாதியாகவோ
இல்லை பிரதிவாதியாகவோ
கூண்டில் நிறுத்தப்பட்டதில்லை.

ஆயினும் பல்வேறு சந்தர்ப்பங்களிலும்
அவ்வாறே “இந்த நான்” நினைத்ததுணடு.
அப்போதெல்லாம் “அந்த நான்” -இற்கு
செயலிற் செயலின்மையையும்
செயலின்மையிற் செயலையும்
காணும் பக்குவம் கனிந்திருக்கவில்லை.

இப்போதும்கூட இடையிடையே
காரிய மயக்கத்தில் அது தன்னையொரு
வாதியாகவோ அன்றி நீதித்தலைமையாகவோ
கற்பனையில் களிக்கிறது
காலத்தை வீணே கழிக்கிறது.
அதற்கும் கூட “நான்” தான் சாட்சி