Showing posts with label நான் சும்மா. Show all posts
Showing posts with label நான் சும்மா. Show all posts

Sunday, March 8, 2009

நான் சும்மா

அம்மாவும் அப்பாவும்
சும்மா இருக்கையில்
சும்மா இராததால்
சும்மா “நான்” ஜனித்தேன்

சும்மாவே பிறந்ததாலோ
சும்மா சும்மா அழுதேன்
சும்மா சும்மா அடம்பிடித்து
அம்மாவிற்குலை வைத்தேன்

சும்மா இருப்பது
“குவாகுவா” வென்றோ
“puppy shame” என்றோ
கேலிசெய்து,
சும்மாவிருந்தவென்னை
ஆடைகட்டி அழகுசெய்தர்
சும்மா படிக்க வைத்தர்
சும்மாவே வளர வைத்தர்

சும்மா சும்மாவென
எல்லாமே சும்மாவாய்...
அம்மாண “நான்“ -ஆல,
சும்மா இருக்கேலா.

சும்மா பொழுதுபோக
வலைப்பின்னல் நெய்தேன்
நண்பன் “call” எடுத்து
என்னப்பா செய்கிறாயாம்.
சும்மாவே சொன்னேன்
சும்மா தான் இருக்கிறேன்
சும்மா இருக்காதே
ஏதாவது செய்யென்றான்
என்னசெய்யவெனக் கேட்க
சும்மா ஏதாவது செய்யட்டாம்.

என்னைய்யா சும்மா?
எதுவையா சும்மா?
சும்மா உட்காந்து யோசிக்க
சும்மா சும்மா எண்ணங்கள்.

வாழ்க்கை சும்மா
வாலிபம் சும்மா
பிறப்பு சும்மா
இறப்பு சும்மா
சாமி சும்மா
சாத்தான் சும்மா
ஆண் சும்மா
பெண் சும்மா
அது சும்மா
இது சும்மா

எல்லாமே சும்மாவாய்
சும்மாவும் சும்மாவாய்
சும்மா சும்மா
சும்மா வளர்ந்தது.

காய்ந்த காட்டிடை
கக்கிய தீயதாய்
“நான்” இனை நோக்கியும்
சும்மா வந்தது.

சும்மா வந்தது
சுற்றி வளைத்தது.
சும்மாவிருந்த “நான““-ஐ
சூழ்ந்து நின்றெரித்தது.
எரிந்து முடிந்து
எஞ்சியதெதுவென
சும்மா பார்த்தேன்.
அட!
“சும்மா”.

நான் சும்மா
நீ சும்மா
போடா சும்மா.